HOME      Khutba      தந்தையை மதிப்போம்! | Tamil Bayan - 900   
 

தந்தையை மதிப்போம்! | Tamil Bayan - 900

           

தந்தையை மதிப்போம்! | Tamil Bayan - 900


தந்தையை மதிப்போம்!
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : தந்தையை மதிப்போம்!
 
வரிசை : 900
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 09-08-2024 | 05-02-1446
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம். அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து உண்டாக்கினான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறி உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை தக்வாவை நினைவூட்டி உபதேசம் செய்து, அல்லாஹ்விடத்தில் எனக்கும் உங்களுக்கும் அவனுடைய மன்னிப்பையும் அருளையும் அன்பையும் மறுமையின் மகத்தான வெற்றியையும் வேண்டியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வ தஆலா நம்மை மன்னிப்பானாக! நேர்வழியிலே நம்மை உறுதிப்படுத்துவானாக! வழிகேட்டின் எல்லா வகைகளிலிருந்தும் அல்லாஹுத்தஆலா என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக! ஆமீன். 
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே ஷைத்தானுடைய வழிகேடுகள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஷிர்க்கின் பக்கம் தூண்டுவது மட்டும் , குஃப்ரிலே தள்ளுவது மட்டும் அவனுடைய வேலை அல்ல. 
 
அல்லாஹு தஆலா சொல்கிறான்: 
 
اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِ‏
 
ஷைத்தான் தன்னுடைய கட்சிக்காரர்களெல்லாம் நரகவாசிகளாக ஆக வேண்டும் என்பதற்காக தன்னுடைய கூட்டத்தை அவன் அழைக்கிறான். (அல்குர்ஆன் 35:6)
 
சகோதரர்களே! நரகத்தில் மனிதனை இழுத்து செல்லக்கூடிய ஒவ்வொரு பாவத்தின் பக்கமும் ஷைத்தான் மனிதனை தூண்டிக்கொண்டே இருப்பான். அழைத்துக் கொண்டே இருப்பான். அதிலே தள்ளுவதற்கான எல்லா வழிகளையும் செய்வான். யாரை எதில் தள்ள வேண்டுமோ, யாரை எங்கே சறுக்க வைக்க முடியுமோ, உஷாராக அங்கே சறுக்க வைத்து விடுவான். முடிந்தால் ஷிர்க். அது முதலாவது இலக்கு மெயின் டார்கெட். குஃப்ர் முக்கிய இலக்கு அது மெயின் டார்கெட். நிஃபாக் -நயவஞ்சகம். 
 
அது போக, ஏதாவது ஒரு பெரும் பாவத்திலாவது அவனை தள்ளி அதிலே அவனை அந்த பாவத்திலே மூழ்கடித்து அது பாவம் என்று தெரியாத அளவுக்கு அவனுடைய உணர்வை முதலில் மழுங்க செய்வான். ஏனென்றால், பாவம் என்ற உணர்வு இருந்தால் கண்டிப்பாக அவன் தவ்பா கேட்பான். 
 
அதனால் அந்த பாவ உணர்வை, அது பாவம் என்ற அந்த அருவருப்பை அவனுடைய உள்ளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, பாவத்தின் மீது உண்டான, எப்படி ஒரு நஜிசின் மீது மனிதனுக்கு அருவருப்பு இருக்குமோ அந்த அருவருப்பை அவனுடைய உள்ளத்திலிருந்து எடுப்பான். 
 
இன்று, ஒரு முஸ்லிமிடத்திலே ஒரு பன்றிக்கறியை கொடுத்து சாப்பிடு என்றால் சாப்பிடுவானா? சாராயம் குடிக்கக்கூடிய ஒரு முஸ்லிம் இருக்கிறான். ஆனால் பன்றிக்கறியை சாப்பிட மாட்டான். பன்றிக்கறி சாப்பிடுவது எப்படி அருவருப்பானதோ அசிங்கமானதோ அதேபோன்றுதான் அந்த போதையை குடிப்பதும். ஆனால், அந்த போதையின் மீது உண்டான அருவருப்பை எடுத்து விட்டான். இப்படி பல உதாரணங்களை சொல்லலாம். 
 
பல பேர் பன்றிக்கறி சாப்பிட மாட்டார்கள். மது குடிக்க மாட்டார்கள். ஆனால், வட்டிக்கு வாங்கி உண்பார்கள். வட்டியை பயன்படுத்துவார்கள். இப்படியாக யாரை எந்த பெரும் பாவத்தில் தள்ளி அல்லாஹ்வுடைய கோபத்திற்குரியவனாக, அல்லாஹ்வுடைய வெறுப்புக்குரியவனாக ஆக்க முடியுமோ அந்த வேலையை செய்வதுதான் ஷைத்தானுடைய வேலை. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! 
 
ஆகவே, அல்லாஹு தஆலா சொல்வதை புரிய வேண்டும். உங்கள் எதிரியான ஷைத்தானை எதிரியாகவே நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். அவன் ஒருபோதும் நல்லதை சொல்லவே மாட்டான். ஒருபோதும் அவன் நமக்கு நன்மையை ஏவவே மாட்டான். 
 
அவனுக்கு வேலையே என்ன? பாவத்தை அலங்கரிப்பது, குற்றத்தை அலங்கரிப்பது, தூண்டுவது, அதன் பக்கம் இழுப்பது. நாளை மறுமையில் எங்களை வழிகெடுத்து விட்டாயே! சண்டாள பாவியே! நாசக்காரனே என்று நரகவாசிகள் எல்லாம் ஷைத்தானைத்தேடி ஓடுவார்கள்.. 
 
அந்த நேரத்திலே ஷைத்தான் அவர்களை பார்த்து என்ன சொல்வான் தெரியுமா? அட அறிவாளிகளா! எனக்கு என்னடா அதிகாரம் இருந்தது உங்களை வழிகெடுப்பதற்கு.
 
اِلَّاۤ اَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِىْ‌  فَلَا تَلُوْمُوْنِىْ وَلُوْمُوْۤا اَنْفُسَكُمْ‌  مَاۤ اَنَا بِمُصْرِخِكُمْ وَمَاۤ اَنْتُمْ بِمُصْرِخِىَّ‌  اِنِّىْ كَفَرْتُ بِمَاۤ اَشْرَكْتُمُوْنِ مِنْ قَبْلُ‌  اِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
 
மேலும், காரியங்கள் (தீர்ப்புக் கூறி) முடிக்கப்பட்டபோது ஷைத்தான் கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்கை அளித்தான். இன்னும், நான் உங்களுக்கு வாக்களித்தேன். ஆனால், நான் உங்களை வஞ்சித்தேன். இன்னும், உங்கள் மீது எனக்கு அறவே அதிகாரம் ஏதும் இருக்கவில்லை. எனினும், உங்களை (பாவத்தின் பக்கம்) அழைத்தேன்; எனக்கு நீங்கள் பதில் தந்தீர்கள்; ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நிந்தித்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு உதவுபவனாக இல்லை, நீங்களும் எனக்கு உதவுபவர்களாக இல்லை. முன்னரே நீங்கள் என்னை (அல்லாஹ்விற்கு) இணை ஆக்கியதையும் நிச்சயமாக நான் நிராகரித்தேன். நிச்சயமாக அநியாயக்கார அவர்களுக்கு - துன்புறுத்தும் தண்டனை உண்டு.” (அல்குர்ஆன் 14:22)
 
வசனத்தின் கருத்து : உங்களை கழுத்தைப் பிடித்தா நான் தள்ளினேன். உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்கிறானே, என்ன அர்த்தம்? இதை குடி; இவனை கொலை செய்! வட்டியை வாங்கு, என்று கழுத்திலே கத்தி வைத்து உன்னை தள்ளினேனா? எனக்கு என்ன அதிகாரம் இருந்தது? உன்னை வழி கெடுப்பதற்கு. 
 
நான் உன்னை தூண்டினேன். நீ செய்தாய் அவ்வளவுதான். நான் உன்னை அழைத்தேன். நீ என்னுடைய அழைப்புக்கு பதில் கொடுத்தாய். நானும் உனக்கு உதவ முடியாது இன்று. நீயும் எனக்கு உதவ முடியாது. என்னை பழிக்காதே என்று ஷைத்தான் சொல்லுவான். என்னை ஏன் திட்டுகிறீர்கள்? என்னை திட்டாதீர்கள். உங்களை திட்டுங்கள். உங்களை ஏசிக் கொள்ளுங்கள். உங்களை பழித்து கொள்ளுங்கள் என்று சொல்வான். 
 
மறுமையில் மஹ்ஷரிலே நடக்கக்கூடிய நிகழ்வை அல்லாஹுத்தஆலா கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறான். படித்து பாருங்கள்! ஏன் இந்த விஷயத்தை நான் நினைவூட்டுகிறேன் என்றால், இன்று எத்தனையோ வணக்கசாலிகள் தொழுகையாளிகள் ஒழுக்கத்தை பேணக்கூடிய சகோதர சகோதரிகள் முஸ்லிமான பெண்கள் முஸ்லிமான வாலிபர்கள் தங்கள் தந்தையின் விஷயத்தில் அல்லாஹ்விற்கு மாறு செய்து விடுகிறார்கள். 
 
தந்தையை மதிக்காத ஒரு சமுதாயம் ஒன்று தோன்றி இருக்கிறது. உருவாகி இருக்கிறது. தாயிடத்தில் கூட கொஞ்சம் அன்பாக பண்பாக பரிந்து இரக்கமாக நடந்து கொள்வார்கள். ஆனால் இன்றைய சமுதாயத்தில் தந்தையை மதிக்காத, தந்தையை புறக்கணித்த, அவர்களிடத்திலே ஆலோசனை கேட்காத வாலிபர்களின் ஒரு கூட்டம் உருவாகிவிட்டது.
 
அதுவும் அவர்கள் படித்து கொஞ்சம் சுயமாக சம்பாதித்து விட்டால், தந்தைக்கு எந்த மதிப்பும் இல்லை. தந்தை சொல்லுக்கு மதிப்பு இருப்பதில்லை. தந்தையின் கட்டளைக்கு மதிப்பு இருப்பதோ கீழ் படிவதோ அது ஒரு பக்கம் இருக்கட்டும். 
 
வீட்டில் ஒரு தந்தை ஒரு சாதாரணமாக அறிவுரை சொன்னால் கூட, அந்த அறிவுரையை பொறுத்துக் கொள்ள, ஏற்க முடியவில்லை. ஒரு ஹதீஸிலே வருகிறது. அந்த ஹதீஸ் உடைய அறிவிப்பாளர்களை பற்றி சிறிது சர்ச்சை இருந்தாலும் பெரும்பாலும் மார்க்க அறிஞர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஹதீஸ்.
 
 மறுமையின் அடையாளங்களிலே 12 அடையாளங்களை ஒரு ஹதீஸிலே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பட்டியலிடுகிறார்கள். அந்த மறுமையின் அடையாளங்களிலே ஒன்று,
 
وَأَدْنَى صَدِيقَهُ، وَأَقْصَى أَبَاهُ
 
தனது நண்பனை நெருக்கமாக்கிக் கொள்வான். தனது தந்தையை தூரமாக்கி விடுவான். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2211.
 
நண்பனோடு நேரம் கழிப்பான். நண்பனுக்கு செலவு செய்வான். நண்பனுக்கு உதவுவான். நண்பன் அழைத்தால் செல்வான். ஆனால் அதில் சில அந்த பண்புகளை கூட தன்னுடைய தந்தையிடத்திலே பேணமாட்டான். எத்தகைய துர்பாக்கியவான் யோசித்துப் பாருங்கள்! 
 
அல்லாஹ்வின் அடியார்களே! நூற்றுக்கணக்கான வசனங்கள் ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் பெற்றோரை பற்றி அல்லாஹ் சொல்கின்றானே! அது தந்தையின் விஷயத்திலும் என்பதை உணருங்கள்! தாய்க்கு மட்டுமல்ல, தந்தையின் விஷயத்திலும் அந்த அறிவுரை உள்ளது. 
 
சூரத்துல் பலது என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. அந்த அத்தியாயத்திலே அல்லாஹ் தந்தையின் மீது சத்தியம் செய்கிறான்:
 
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ‏
 
தந்தையின் மீது சத்தியம் செய்கிறேன்! (அல்குர்ஆன் 90:3)
 
அல்லாஹு தஆலா ஒன்றின் மீது சத்தியம் செய்கிறான் என்றால் எவ்வளவு கண்ணியம் மதிப்பு மரியாதை அதற்கு கொடுக்கப்பட வேண்டும்! அதை உணர வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்! 
 
இன்று முஸ்லிம் சமூகம் தந்தையை மதிக்காத ஒரு சமூகமாக மாறி வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. சிலர் இருக்கலாம், பொதுவாக எல்லோரும் அப்படி என்று சொல்லவில்லை. ஆனால் நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. 
 
அத்தகைய பிள்ளைகள் குறைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம், ஷைத்தானின் வழிகேடு இந்த இயந்திர வாழ்க்கையிலே அவர்கள் படிக்கக்கூடிய ஈமான் இஸ்லாம் இல்லாத அக்லாக் பண்பாடுகள் இல்லாத அவர்களுடைய மெட்டீரியல் ஸ்டடி, வெறும் காசு பணத்தை அடிப்படையாக வைத்து பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து அவர்கள் பயிற்றுவிக்கக்கூடிய அந்த கல்வி, அதுபோன்று அவர்கள் வாழக்கூடிய சூழ்நிலை அதற்கு மேலாக ஷைத்தான் தனது தந்தைக்கு மாறு செய்வதை அவருக்கு மனவேதனை கொடுப்பதை அவரை முறைப்பதை எதிர்ப்பதை அவரை பகைப்பதை அது ஒரு பாவம் குற்றம் என்ற உணர்வே இல்லாமல் இன்றைய வாலிப சமுதாய ஆண்கள் பெண்கள் வளர்ந்து விட்டார்கள் என்றால் எத்தகைய ஒரு மோசமான ஆபத்தான கட்டத்தை எட்டி இருக்கிறோம்! 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
رِضَا الرَّبِّ في رِضَا الوالدِ، وسَخِطُ الرَّبِّ في سَخَطِ الوالدِ
 
தந்தை உடைய பொருத்தத்தில் அல்லாஹ்வுடைய பொருத்தம் இருக்கிறது. தந்தை உடைய கோபத்தில் அல்லாஹ்வுடைய கோபம் இருக்கிறது. 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண்: 1899.
 
மேலும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
الوالِدُ أوسطُ أبوابِ الجنَّةِ، فإنْ شِئتَ فأضِعْ ذلك البابَ أو احفَظْه
 
தந்தை சொர்க்கத்தின் வாசல்களிலேயே நடுவாசல். நீ விரும்பினால் அந்த வாசலை வீணாக்கிவிடு! இல்லை என்றால் அதை பாதுகாத்துக் கொள்! சொர்க்கத்தின் அந்த நடுவாசலை உனக்காக பாதுகாத்துக் கொள்வதோ வீணாக்குவதோ அது உன்னுடைய செயலிலே இருக்கிறது. 
 
அறிவிப்பாளர் : அபூ தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண்: 1900.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே ஒருவர் வருகிறார். அல்லாஹ்வின் தூதரே! நான் சம்பாதிக்கக்கூடிய செல்வத்தை எல்லாம் என் தந்தை எடுத்துக் கொள்கிறார். 
 
(இன்று நிலைமை அப்படியே மாறி இருக்கிறது. தந்தை உடைய சொத்தை தந்தை அனுபவிப்பதை தடுக்கக்கூடிய தரித்திரியம் பிடித்த பிள்ளைகள் உருவாகி இருக்கிறார்கள். ஒரு வயதுக்கு மேல் தந்தை சென்று விட்டால் அவர் சம்பாதித்த, தனது வாலிபத்தை எல்லாம் தொலைத்து தனது பிள்ளைக்காக குடும்பத்திற்காக என்று தன்னை தேய்த்துக் கொண்ட, அந்த தந்தைக்கு அவருடைய செல்வத்தில் அவருடைய ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் அந்த தந்தைக்கு உரிமை கொடுப்பதில்லை. 
 
தந்தையிடம்  மகனும் மகளும் கேட்கும் கேள்வி இது! யாருக்கு வேண்டுமானாலும் எடுத்து கொடுத்துருவீங்களா? நீங்க உங்க அக்கா வந்துட்டா, உங்க தங்கச்சி வந்துட்டா, உங்க தம்பி வந்துட்டா, அவங்க பிள்ளைக்கு தேவை என்றால்? 
 
இன்னும் கேடுகெட்ட நிலைகளை சொல்கிறேன்; தனது தாய் இறந்து தனது வயதான தந்தைக்கு பணிவிடை செய்வதற்காக அவர் ஒரு திருமணத்தை நாடினால் அந்த திருமணத்தை தடுக்கக்கூடிய அளவுக்கு கேவலமான புத்தி இன்றைய முஸ்லிம்களிடத்திலே உருவாகி இருக்கிறது. 
 
காரணம் என்ன தெரியுமா? நேத்து புதுசா வர்றவங்களுக்கு சொத்து போயிடுமாம். அட பிச்சைக்கார பயலே. வார்த்தையை கவனியுங்கள்! நேத்து புதுசா வர்றவங்களுக்கு 
 
அதனால இன்னும் என்ன செய்கிறார்கள்? குழந்தை பெற்றெடுக்கக்கூடிய பெண்ணை மணமுடித்து கொடுப்பதில்லை. ஒருவேளை குழந்தை பிறந்திருச்சுனா நேத்து வந்த பையன் எங்க சொத்துல சமமா வந்து பங்கு கேட்பானே! 
 
குஃப்பார்களை விட கேடுகெட்ட சமுதாயம். தோற்றத்தால் முஸ்லிம்கள். குணத்தால் குஃப்பார்கள். தோற்றத்தால் முஸ்லிம்கள்; ஹாஜி, இபாதத்தாலி வணக்கசாலி, சலஃபி என எல்லா பெயர்களும் இருக்கும். தோற்றத்தால் தொழுகையாளிகள் குணத்தால் குஃபார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! 
 
இன்னும் சில நிலைமைகள் எல்லாம் இருக்கிறது. வயசான தந்தை மணம் முடித்து விட்டார் ஏதோ நான்கு பஞ்சாயத்து பண்ணி ஊருகாரங்க ஏதோ சேர்ந்து கல்யாணமும் பண்ணி வச்சிட்டாங்க. அடுத்து என்ன நடக்குது? பிள்ளைங்களால தடுக்க முடியல. ஓரளவு தடுத்து பார்த்தாங்க தடுக்க முடியல. கை மீறி போயிருச்சு. 
 
இப்ப தந்தை கொஞ்சம் உடம்பு சரி இல்லாமல் இருக்கிறார். அந்த நேரத்தில் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக தலாக் கூறும்படி தந்தையை வற்புறுத்துகிறார்கள். ஏன்? எதற்காக? திருமணத்தில் இருக்கும் பொழுது என் தந்தை மரணித்து விட்டால் என் தாய்க்கு கிடைக்காத சொத்து இவளுக்கா? 
 
அதுக்கு என்ன பண்றது? அல்லாஹ்வுடைய விதி. உன் தாய் உன்னுடைய தந்தையை முந்தி இறந்துவிட்டார். அவளுக்காக துஆ செய்! உனக்கு கிடைக்கக்கூடிய சொத்திலே உனது தாய்க்கு ஒரு சதக்கா ஜாரியாவை செய்! 
 
அதுக்கு உனக்கு மனசு வரல, முஸ்லிம்களில் ஒரு ஏழை பெண் வயதான கணவனுக்கு வாக்கப்பட்டு அவனுக்கு பணிவிடை செய்து அவனை அந்த வயதான வயதிலே பாதுகாத்து, அவனுடைய மனதுக்கு ஆறுதல் கொடுத்து, அவனுடைய ஆசைகளை நிறைவேற்றி கொடுத்து, எல்லாம் செய்த அந்த பெண் உனக்கு எந்த தரத்திற்கு வந்து விட்டால்? விபச்சாரியா அவள்? 
 
அல்லாஹ்வுடைய கலிமாவை கொண்டு உன்னுடைய தந்தை ஹலால் ஆக்கி இருக்கிறார். அல்லாஹ்வுடைய பெயரை சொல்லி திருமணம் முடித்த ஒரு பெண்ணை நேத்து வந்தவளுக்கு சொத்து போகணுமா?  எவ்வளவு அற்பமான எண்ணம்
 
சம்பாதித்தது யார்? உன் சொத்தையா கொடுக்க சொன்னாங்க? உன்னுடைய தந்தையின் சொத்து. இன்றைக்கு நவீன முஸ்லிம்கள் தந்தை இறந்து இந்த மாதிரி பிரச்சனை வரும்னு சொல்லிட்டு அவரு இருக்கும் போதே செட்டில் பண்ணிடுங்க வாப்பா. 
 
குஃப்ர் -நிராகரிப்பு. எப்படி எல்லாம் உள்ளத்துக்குள் ஊடுருவுகிறது! நம்ம எல்லாம் மூஃமின்கள் முஸ்லிம்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
 
என்னைப் பொறுத்த வரைக்கும் நான் சொல்றேன்; நான் இப்பதான் இஸ்லாமை படிக்கிறேன். ஈமானை படிக்கிறேன். இனிமே நான் மௌத்தா போறது குள்ளாற  முஸ்லிமா முஃமினா மவுத்தா போயிட்டா அல்ஹம்துலில்லாஹ்! 
 
நான் முஸ்லிம் ஆகுறதுக்கு முஸ்லிமா மாறுவதற்கு முஃமினா மாறுவதற்கு முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன். 
 
முன்னாள் குறிப்பிட்ட ஹதீஸின் தொடர்; ஒருவர் வந்து சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தை என் சொத்தை எல்லாம் செலவு செய்து விடுகிறார். 
 
(அந்த வார்த்தையை கவனிக்கணும்! என் சொத்தை மொத்தமாகவே அழித்து விட்டார். இப்ப மாதிரி 500 1000-க்கு பிரச்சனை வரல. மொத்தமாகவே அவர் காலி பண்ணிட்டாரு. என்ன செஞ்சிருப்பாரு. தர்மம் பண்ணியிருப்பார். அவங்க என்ன செஞ்சி இருப்பாங்க. சதக்கா செஞ்சு இருப்பாங்க. அவ்வளவுதானே.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
أنتَ ومالُكَ لأبيكَ وقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ إنَّ أولادَكم من أطيبِ كسبِكُم فَكلوا من أموالِهم
 
தோழரே! நீயும் உனது செல்வமும் உனது தந்தைக்குரியவர்கள் தான்.  உன் செல்வம் மட்டுமல்ல, நீயும் உனது தந்தைக்குரியவர் தான். அவருக்கு போக தான் மிச்சம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
உங்களுடைய பிள்ளைகள் நீங்கள் சம்பாதித்த செல்வங்களிலேயே சிறந்த செல்வங்கள். எனவே அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அனுபவிங்கள் என்று தந்தைமார்களுக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி எண் :1351.
 
மகன் கேட்கும் போதெல்லாம் தந்தை கொடுத்து கொண்டு இருந்தார். ஒரு தாய் பத்து மாதம் தனது பிள்ளையை சுமக்கிறாள் என்றால், இரண்டு ஆண்டுகள் பால் குடிக்கிறாள் என்றால் ஒரு தந்தை வாழ்நாள் எல்லாம் அந்த பிள்ளையை சுமந்து கொண்டிருக்கிறான். 
 
திருமணம் முடித்து குழந்தை பிறந்ததிலிருந்து பிள்ளைகளுக்காக... பிள்ளைகளுக்காக... என்று தந்தை வாழ்நாள் எல்லாம் ஓடுகிறார். ஆனால் அந்த பிள்ளை தந்தையாவது மண்ணாங்கட்டியாவது, அவர் பேச்சை நான் கேட்கணுமா? அவர் விருப்பத்துக்கு நான் நடக்கணுமா? முஸ்லிம்களின், முஸ்லிம் வாலிபர்களுடைய நிலையா இது? 
 
குர்ஆனும் ஹதீஸும் உருவாக்கிய சமுதாயம் இப்படி இருக்குமா? நீங்கள் தொழுது என்ன பிரயோஜனம்? உங்களுடைய புர்கா ஹிஜாபிலே என்ன பயன்? 
 
இது எப்படி என்றால், முன்பு உதாரணம் சொன்னது போன்று தான், ஒருவன் பன்றிக்கறி மட்டும் சாப்பிட மாட்டான். ஆனால் மது குடிப்பான் இப்படி ஒருவன். அதுபோன்று, பன்றிக்கறி சாப்பிட மாட்டான். மது குடிக்க மாட்டான். ஆனால் வட்டி வாங்குவான். இப்படி ஒருவன். எல்லாம் ஹராம். 
 
அதுவும் உன்னுடைய தந்தைக்கு நீ செய்யக்கூடிய துரோகம். அநியாயம் அக்கிரமம் இருக்கிறதே இது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா! தந்தைக்கு கீழ்ப்படியாமை இன்று இஸ்லாமிய மார்க்கத்திலே மிகக் கடுமையான குற்றம். உங்களுக்கு தெரியலாம். இரண்டு சம்பவங்களை சொல்கிறேன். 
 
ஒன்று, பெரும்பாலும் அதிகமாக நீங்கள் கேள்விப்பட்டது. என்ன சம்பவம்? இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் தனது மகனார் இஸ்மாயிலை பார்க்க வந்தார்கள். முதல் முறை வந்த போது நடந்த அங்கே மருமகள் இருக்கிறாள். மகன் இல்லை. நிலைமையை விசாரிக்கிறார்கள். மருமகள் ப;தில் சொல்கிறார். 
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் திரும்ப செல்லும்போது இஸ்மாயில் வந்தால் வீட்டின் நிலப்படியை மாற்றி விடும்படி நான் கூறினேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விடுகிறார். 
 
இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்ததற்குப் பிறகு புரிந்து கொண்டார்கள். நபிமார்களுக்கு என்று ஒரு வாசம் இருக்கும். ஒரு ஒளி இருக்கும். புரிந்து கொண்டார்கள். 
 
யாராவது பெரியவங்க வயசானவங்க வந்தாங்களா? ஆமா ஒருத்தர் வந்தார். அப்படியா போய்ட்டாரா என்ன சொன்னார்? நிலைப்படியை மாற்ற சொன்னார். வீட்டுக்குள்ளாரையே வரல. வீட்டின் நிலைப்படி என்பது நீதான்! உன்னை தலாக் விடும்படி என் தந்தை சொல்லிவிட்டார். உங்க அம்மா வீட்டுக்கு போயிடு என்றார்கள்.
 
இன்னொரு சம்பவத்துக்கு வாங்க. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்தில் நடந்த சம்பவம். 
 
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். அவங்களுக்கு நடந்த சம்பவம். நான் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணேன். எனக்கு அந்த மனைவி மேல ரொம்ப முஹப்பத். ஆனா என் தந்தை உமருக்கு பிடிக்கவில்லை. 
 
(அம்மாமார்களுக்கு பிடிக்கலன்னா அது வேற விஷயம் கவனிக்கணும்.)
 
இங்க யாருக்கு பிடிக்கவில்லை? என் தந்தைக்கு பிடிக்கவில்லை. என் தந்தை நான் அந்த பெண்ணை தலாக் விடும்படி எனக்கு சொல்கிறார். அல்லாஹ்வுடைய தூதரே! நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு அந்த பெண்ணை தலாக் விடுறதுக்கு மனசு இல்லை. எனக்கு ரொம்ப முஹப்பத்தான பெண். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
உனது மனைவிக்கு தலாக் கொடுத்து விடு! அவ்வளவுதான். நேராக இப்னு உமர் வந்தார்கள். தலாக் கொடுத்து விட்டார்கள். 
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபுதாவூது, எண் : 5138.
 
சகோதரர்களே! தந்தைக்கு கீழ்படிதல் என்பது அவ்வளவு பெரிய முக்கியமான ஒரு தரத்திலே இருக்கிறது. அல்லாஹ்வுடைய இந்த தீனிலே தந்தைக்கு கீழ்ப்படிவது என்பது ஒரு மனிதனுடைய ஒரு முஸ்லிமுடைய ஒரு முஃமினுடைய ஈமானின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ளுங்கள். 
 
நம்முடைய சஹாபாக்கள் எப்படி மார்க்கத்தின் கட்டளைகளை புரிந்திருக்கிறார்கள் பாருங்கள்! 
 
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ், பெரிய ஸஹாபி. அவருடைய தந்தை அப்துல்லாஹ் அவரும் பெரிய ஸஹாபி. உஹது போர் தொடங்குவதற்கு முன்பாக தந்தை அப்துல்லாஹ், மகன் ஜாபிரை அழைக்கிறார். மகனே நாளை போரிலே ரசூலுல்லாஹ் உடைய தோழர்களில் முதலாவதாக கொல்லப்பட்டு விடுவேன் என்று தான் நினைக்கிறேன். 
 
ஆகவே, நான் உனக்கு சொல்கிறேன்.  உன்னுடைய சகோதரிகள் விஷயத்தில் நீ கருணையாக அனுசரணையாக நடந்து கொள்! அவர்களை நீ பேணிக்கொள்! எனக்கு கடன் இருக்கிறது. அந்த கடனை எல்லாம் அடைத்து விடு என்கிறார். 
 
அந்த சஹாபி எப்படி ஆசைப்பட்டாரோ சொன்னாரோ அது போன்று முதல் நேரத்திலேயே அந்த சஹாபி கொல்லப்பட்டு விடுகிறார். 
 
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வரலாறை நீங்கள் படித்து பாருங்கள்.. ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு தன்னுடைய தந்தையை இன்னொரு சஹாபியோடு சேர்த்து அடக்கம் செய்து விடுகிறார்கள். வேற வழி இல்லை அன்னைக்கு ராத்திரிக்குள்ளார அடக்கம் பண்ணிட்டு மதினாவுக்கு திரும்புறதுக்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிட்டாங்க. 
 
தன்னுடைய தந்தை இன்னொரு கப்ரிலே இருப்பதை மனதை ஏற்றுக் கொள்ளாமல் ஆறு மாதம் கழித்து அவரைத் தோண்டி தன்னுடைய தந்தையை தனியாக கப்ரில் அடக்கம் செய்வோம் என்பதாக வருகிறார்கள். 
 
ஆறு மாதம் கழித்து அவர்கள் வரும்பொழுது அவர்களுடைய உடல் அப்படியே இருந்தது. இங்க கவனிக்க வேண்டிய செய்தி என்ன? 
 
நம்முடைய அறிஞர்கள் சொல்கிறார்கள்: தன்னுடைய தந்தையின் மீது அவர் வைத்திருந்த பாசம் இரக்கம். தன்னுடைய தந்தை இன்னொரு கப்ரில் இருப்பதை அவரால் ஆறு மாதமாக அவருடைய உள்ளத்திலே அது வருத்திக் கொண்டிருந்தது. அவருக்கென்று ஒரு கப்ரை என்னால் நோண்ட முடியாமல் போய்விட்டதே! என்ற ஏக்கத்தில் ஆறு மாதம் கழித்து வந்து அந்த தந்தைக்கு தனி குழி தோண்டி அடக்கம் செய்கிறார்கள். 
 
அது மட்டுமல்ல, வாலிபமான இந்த சஹாபி ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு தன்னுடைய சிறு வயதில் இருக்கக்கூடிய சகோதரிகள் தன்னுடைய தந்தையை அமானிதமாக விட்டு சென்ற அந்த பொக்கிஷங்கள் அவர்களுக்காகவே வயதான ஒரு பெண்ணை திருமணம் முடிக்கின்றார்கள். 
 
எங்கே தன் வயதுக்கு சமமான பெண்ணை திருமணம் முடித்தால் நான் அவளோடு என்னுடைய வாழ்க்கையை மறந்து விடுவேனோ என்ற பயத்தில் தன்னுடைய சகோதரிகளை பராமரிப்பதற்கு தகுதி உள்ள ஒரு வயோதிகமான ஒரு பெண்ணை மனம் முடிக்கிறார்கள் என்றால் தன்னுடைய தந்தைக்கு அவர் கொடுத்த மரியாதையை தந்தையின் அறிவுரை ஆலோசனைக்கு வசிய்யத்துக்கு அவர் கொடுத்த அந்த கண்ணியத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 
 
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1351.
 
அன்பான சகோதரர்களே! நமக்கு எப்படி தொழுகை வேண்டுமோ, நமக்கு எப்படி நோன்பு வேண்டுமோ, நமக்கு எப்படி ஜக்காத் வேண்டுமோ, நமக்கு எப்படி இன்ன பிற இபாதத்துகள் வேண்டுமோ அதுபோன்று தந்தைக்கு கீழ்ப்படிதலும் நமக்கு வேண்டும். அது ஒரு இபாதத் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 
 
உங்களுடைய தந்தையை மகிழ்ச்சி படுத்துவது, உங்களுடைய தந்தையை திருப்திப்படுத்துவது, அவருக்கு பணிவிடை செய்வதற்கு அவருக்கு நேரம் கொடுப்பது, அவரை விசாரிப்பது, அவருக்கு செலவு செய்வது, அவரோடு மரியாதையாக பண்பாடாக பணிவாக பேசுவது. அது ஒரு இபாதத். உங்களை சொர்க்கத்தில் சேர்க்கக்கூடிய (அமல்) நற்செயல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! 
 
அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த நற்பாக்கியத்தை தந்தருள்வானாக! யாருடைய தந்தை இறந்துவிட்டார்களோ அவருடைய கப்ர்களை அல்லாஹ் பிரகாசமாக்குவானாக! அவர்களுடைய உறவுகளுக்கு உதவி செய்யக்கூடிய அவர்களுடைய நண்பர்களுக்கு உதவி செய்யக்கூடிய நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக!
 
நம்முடைய முஸ்லிம் குடும்பங்களை அல்லாஹு தஆலா சீர்திருத்தம் செய்வானாக! நற்குணங்களை கொண்டு அல்லாஹு தஆலா அலங்கரிப்பானாக! ஒவ்வொரு கெட்ட குஃப்ரான ஷிர்க்கான நயவஞ்சகத்தின் ஒவ்வொரு சொல்லை விட்டும் செயலை விட்டும் குணங்களை விட்டும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் நமது சந்ததிகளையும் பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/