HOME      Khutba      மரணத்தை மறந்த மனிதன்! மனிதனை மறக்காத மரணம்! | Tamil Bayan - 635   
 

மரணத்தை மறந்த மனிதன்! மனிதனை மறக்காத மரணம்! | Tamil Bayan - 635

           

மரணத்தை மறந்த மனிதன்! மனிதனை மறக்காத மரணம்! | Tamil Bayan - 635


بسم الله الرّحمن الرّحيم
 
மரணத்தை மறந்த மனிதன் மனிதனை மறக்காத மரணம்
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும், கண்ணியத்திற்குரிய குடும்பத்தார் தோழர் மீதும் ஸலவாத்தும், ஸலாமும் கூறியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம் பாவங்களை மன்னிப்பானாக! இந்த உலக வாழ்க்கையில் அல்லாஹ்வுடைய இபாதத்களை அதிகம் அதிகம் செய்வதற்கும், மறுமைக்குண்டான தயாரிப்புகளை நாம் எடுத்துக் கொள்வதற்கும், ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட நல்லோரில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக ஆமீன்!
 
மறதியிலிருந்தும், பாவங்களிலிருந்தும், இந்த உலக வாழ்க்கையில் மூழ்கி மறுமையை மறந்து நஷ்டமடைந்த கூட்டத்திலிருந்து அல்லாஹு தஆலா  என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக ஆமீன்.
 
அன்பிற்குரிய சகோதரர்களே, சகோதரிகளே! அல்லாஹ் சுப்ஹானல்லாஹு வதஆலா நினைவூட்டக்கூடிய விஷயங்களில் ஒன்று,
 
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ
 
நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள். வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். எந்த மரணத்தில் இருந்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை பார்த்து பயந்து ஓடுகிறீர்களோ நிச்சயமாக அது உங்களை சந்தித்தே தீரும். (அல்குர்ஆன் 62 : 8)
 
أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
 
நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்த போதிலும் சரியே. (அல்குர்ஆன் 4 : 78)
 
நாம் நினைக்க வேண்டிய மிக முக்கியமான காரியங்களில் ஒன்று, ஒவ்வொருவரும் தன்னுடைய மரணத்தைப்பற்றி அதற்காக நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்? என்னுடைய கப்ருக்காக நான் என்ன தேடி இருக்கிறேன்? என்னுடைய கப்ரு விசாலமாவதற்கு, என்னுடைய கப்ரு ஒளி நிறைந்ததாக சொர்க்கத்தின் இன்பங்கள் நிறைந்ததாக ஆவதற்கு நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்? 
 
அதற்கு முன்பாக என்னுடைய சகராத் எனக்கு இலகுவாக ஆவதற்கு நான் என்ன தேடி வைத்திருக்கிறேன்? மரண நேரத்தில் அல்லாஹ்வின் நினைவு வருவதற்கு நான் என்ன தேடி வைத்திருக்கிறேன்? என்பதை கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
இதுவெல்லாம் ஒவ்வொரு நாளும் நாம் சிந்திக்க வேண்டிய, இதற்காக அல்லாஹ்விடத்தில் நாம் துஆ செய்ய வேண்டிய காரியங்கள். ஆனால் நாம் எத்தகைய மறதியில் இருக்கின்றோம்! 
 
இந்த மரணத்தை நாம் மறந்தாலும் இந்த மரணம் நம்மை மறக்காது. நாம் மறந்துவிடுவோம். நம்முடைய தந்தையை அடக்கம் செய்த அதே நேரத்தில் மரணத்தை மறந்து விடுகின்றோம். தாயை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை மறந்து விடுகின்றோம். மனைவியை அடக்கம் செய்து விட்டு மறந்து விடுகின்றோம். பிள்ளைகளை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை மறந்து விடுகின்றோம். இப்படியாக நம்முடைய உறவுகளை நம்முடைய நண்பர்களை அடக்கம் செய்கிறோம். 
 
ஆனால் அடக்கம் செய்த அதே இடத்திலேயே நம்மில் பலருக்கு மரணத்தின் மறதி வந்து விடுகிறது. ஏதோ அவருக்கு தான் மரணம் அவர் மரணித்து விட்டார் தனக்கு மரணம் இல்லை என்பதை போன்ற ஒரு மனநிலையில் நாம் அந்த இடத்தில் இருந்து திரும்பி வருகின்ற நிலைமை இன்று நம்மில் பலருக்கு உள்ளது.
 
மறதி இருக்கத்தான் செய்யும். ஆனால் மறதியில் மிக மோசமானது மறுமையை மறப்பது, சகராத்தை மறப்பது, மவ்த்தை மறப்பது, கப்ரை மறப்பது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸை கவனியுங்கள்.
 
 مِن اقْترابِ الساعةِ أَنْ يَظْهَرَ مَوْتُ الْفُجأَةِ
 
மறுமையின் அடையாளங்களில் ஒன்று திடீர் மரணங்கள் அதிகமாகிவிடும்.
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானி, எண்: 1132.
 
அல்லாஹ்வின் அடியார்களே! மறுமை நாள் குறித்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னென்ன சிறிய அடையாளங்களை கூறினார்களோ, அவற்றில் பெரும்பாலான அடையாளங்கள் இன்று நமக்கு முன்னால் வந்து விட்டது. இன்னும் சில பெரிய அடையாளங்களை தவிர. 
 
மறுமை மிக சமீபம் ஆகிவிட்டது என்பதற்கான அடையாளங்களில் ஒன்று திடீர் மரணங்கள் அதிகமாகிவிடும். வெளிப்படையாக பரவலாக ஆகிவிடும். நேற்று வரை நம்மோடு உணவருந்தி கொண்டவர், பேசியவர், பழகியவர், இன்று சந்தூக்கிலே செல்வதை பார்க்கிறோம். அவரை சுமந்து சென்றவர் சில தினங்களிலேயே அவர் சுமக்க படுவதைப் பார்க்கிறோம். 
 
இப்படியாக மரணத்தை சுற்றி சுற்றி நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் மரணத்தை மறந்தவர்களாக இருக்கிறோம். அதற்காக என்ன தயாரிப்பு செய்திருக்கிறோம்? நம்முடைய அமல்களை என்ன சீர்திருத்தி இருக்கின்றோமா? பாவங்களை விட்டு விலகி இருக்கிறோமா? செய்கின்ற பாவங்களுக்காக தவ்பா செய்திருக்கிறோமா? இப்படி ஒவ்வொருவரும் தன்னை தானே விசாரிக்க வேண்டியிருக்கிறது.
 
தாவூத் அலைஹிவசல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று அறிவிப்புகளில் வருகிறது. தாவூத் அலைஹிவசல்லம் வணக்க வழிபாட்டுக்காக, யாரும் தொந்தரவு செய்து விடாமல் வணக்க வழிபாட்டில் மிக கவனத்தோடு, அந்த திக்ரிலே தொழுகையிலே மூழ்கி இருப்பார்கள். திடீரென்று ஒரு மனிதர் வருகிறார். அப்போது தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் யார் என்று. அவர் கூறுகிறார், நான்தான் மலக்குல் மவ்த். தாவூத் அலைஹி வஸல்லம் திகைத்து நிற்கிறார்கள், மலக்குல் மவ்த் சொல்கிறார்கள்;
 
أنا من لا يهاب الملوك ، ولا تمنع منه القصور ، ولا يقبل الرشوة
 
மன்னர்களை நான் பயப்படமாட்டேன். அவர்களின் அரண்மனை என்னை தடுத்து நிறுத்தாது. நான் யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன். 
 
அப்போது தாவூத் அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்; அப்படி என்றால் நீங்கள் மலக்குல் மவுத் ஆக தான் இருக்க வேண்டும் என்று. 
 
-ஒவ்வொரு வார்த்தையும் தாவூத் அலைஹி வஸல்லம் தர்தீப் செய்து வைத்திருப்பார்கள். மக்களை சந்தித்து நற்செய்தி கூறுவதற்காக, ஆட்சி அதிகாரங்களை நிர்வகிப்பதற்காக, குடும்பத்திற்காக, பிறகு அல்லாஹ்வை வணங்குவதற்காக. முற்றிலும் வணக்க வழிபாட்டை தவிர வேறு எதையும் அந்த நாளில் செய்ய மாட்டார்கள். அல்லாஹ் தஆலா தாவூத் அலைஹி வஸல்லம் அவர்களுடைய இபாதத்களை போற்றி புகழ்ந்து அல்குர்ஆனிலே நமக்கு நினைவூட்டுகிறான்-
 
وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ
 
தாவூதுக்கு சுலைமானை நாம் மகனாக தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை நோக்கி நின்றார். (அல்குர்ஆன் 38 : 30)
 
என அல்லாஹ் தாவூத் அலைஹி வஸல்லம் அவர்களை குர்ஆனிலே நினைவு கூறுகிறான். அவர்கள் சொல்கிறார்கள்.;
 
أتيتني ولم أستعد بعد
 
மலக்குல் மவ்த் என்னிடத்தில் வந்துவிட்டீரே! இன்னும் நான் அதற்கான தயாரிப்பு செய்யவில்லையே! 
 
அதற்க்கு மலக்குல் மவுத் சொல்கிறார்;
 
يا داود أين فلان قريبك ؟ أين فلان جارك ؟ قال : مات ، قال : أما كان لك في هؤلاء عبرة لتستعد ؟!
 
தாவூதே!உன்னுடைய இன்ன உறவினர் எங்கே? உன்னுடைய இன்ன அண்டை வீட்டார் எங்கே? யாரெல்லாம் இறந்து விட்டார்களோ அவர்களை எல்லாம் நினைவு கூறி உன்னுடைய அந்த உறவினர் எங்கே? உன்னுடைய அந்த அண்டைவீட்டார் எங்கே? என்று கேட்கிறார். 
 
அப்போது தாவூத் அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் என்று. உடனே மலக்குல் மவ்த் கேட்கிறார். அவர்கள் இறந்ததை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? உமக்கு அவர்களிலே படிப்பினை இருக்கவில்லையா?
 
சகோதரர்களே! ஒரு நபியுடைய நிலைமை இப்படி என்றால், நம்முடைய நிலையை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும்? மரணம் சாதாரணமானது அல்ல. ரப்புல் ஆலமீன் வர்ணிப்பதை பாருங்கள்;
 
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ
 
வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் அவன் செய்யும் செயலை குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றனர். (அல்குர்ஆன் 50 : 17)
 
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
 
மனிதன் எதை கூறிய போதிலும் அதனை எழுத காத்துக்கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது. (அல்குர்ஆன் 50 : 18)
 
وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ
 
மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்து விடும் பட்சத்தில் அவனை நோக்கி நீ தப்பிவிட கருதியது இதுதான் என்று கூறப்படும். (அல்குர்ஆன் : 50:19)
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; 
 
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ» سنن أبي داود 3116 -)]حكم الألباني] : صحيح
 
யாருடைய இறுதிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று இருக்குமோ அவர் சொர்க்கம் செல்வார்.
 
அறிவிப்பாளர்: முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுத், எண்: 3116.
 
எப்போது கலிமா நினைவுக்கு வரும்? முதலில் அது நம் உள்ளத்திலே இருக்க வேண்டும். அல்லாஹ்வின் மீது அன்பு இருக்க வேண்டும். அவன் மீது பயம் இருக்க வேண்டும். மார்க்கத்தின் மீது மதிப்பு இருக்க வேண்டும். 
 
அப்போது தான் அந்த கலிமா நினைவுக்கு வரும். அல்லாஹ்வின் அன்பு உள்ளத்தில் இல்லை. உலக மோகம் உள்ளத்தின் இடங்களை எல்லாம் அப்படியே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. உள்ளம் எப்போதும் இந்த துன்யாவை நினைத்துக்கொண்டே இருக்குமேயானால் அந்த மரண நேரத்தில் எப்படி அல்லாஹ்வை நினைப்பான்? அல்லாஹ் சொல்கிறான்;
 
وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ
 
கருத்து : மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்துவிடும். அந்த நேரத்தில் மலக்கு சொல்வார். மனிதனே இதிலிருந்து தானே நீ பயந்து ஓடிக் கொண்டிருந்தாய். இதிலிருந்து தப்பிப்பதற்காக நீ எங்கு எங்கெல்லாம் ஓடினாய். இதிலிருந்து தப்பிப்பதற்காக நீ எவ்வளவோ முயற்சி செய்தாய். (அல்குர்ஆன் : 50:19)
 
அல்லாஹு அக்பர். நேரம் வந்துவிட்டால், நாம் கண்ணை மூடித்தான் ஆக வேண்டும். பார்த்துக்கொண்டு இருந்த உலகத்தை பார்க்க முடியாமல் போய்விடும். பார்க்காமல் இருந்த ஒரு உலகத்தை அப்போது பார்க்க நேரிடும். 
 
அல்லாஹ் தஆலா சொல்லிக் காட்டுகின்றான்;
 
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
 
உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர் தொண்டைக் குழியை அடைந்தால், (அல்குர்ஆன் 56 : 83)
 
وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ
 
அந்நேரத்தில் நீங்கள் இருப்பவனுக்கு சமீபமாய் இருந்தும் பரக்க பரக்க விழிக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 56 : 84)
 
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ
 
ஆயினும் நாம் அவனுக்கு உங்களை விட மிக சமீபமாக இருக்கின்றோம். எனினும் நீங்கள் நம்மை பார்ப்பதில்லை. (அல்குர்ஆன் 56 : 85)
 
فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ
 
நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் பூரண சுதந்திரம் உடையவர்களாக இருந்து, (அல்குர்ஆன் 56 : 86)
 
تَرْجِعُونَهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ
 
மெய்யாகவே நீங்கள் இதில் உண்மை சொல்பவர்களாகவும் இருந்தால், இறந்த அவனுடைய உயிரை நீங்கள் மீள வைப்பது தானே. (அல்குர்ஆன் 56 : 87)
 
வசனத்தின் கருத்து : யாருக்கும் நாங்கள் கட்டுப்பட தேவை இல்லை. எங்களுக்கு மார்க்கம், இபாதத், தீன் தேவையில்லை என்ற திமிரிலே இருந்தீர்களே! எங்களுடைய கட்டுப்பாட்டில் எல்லாம், எங்களுடைய திறமையில் எல்லாம், எங்களுடைய அறிவியலில் எல்லாம், எங்களது ஆற்றலில் எல்லாம், எங்களது மருத்துவத்தில் எல்லாம் என்ற ஆணவத்தில் இருந்தீர்களே! உங்களால் முடிந்தால் நீங்கள் சொல்வது உண்மை என்றால், இப்போது நாம் உயிர் வாங்குகிறோமே உயிர் வாங்கி விட்டோமே இந்த உயிரை திரும்பக் கொண்டுவந்து காட்டுங்கள் பார்க்கலாம். உங்களால் முடிந்தால் அந்த உயிரை மீட்டுப் பாருங்கள்.
 
அல்லாஹ்வின் அடியார்களே! உலகத்திலே ஏதாவது ஒரு சக்தி இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். யாருக்காவது ஏதாவது அப்படிப்பட்ட ஆற்றல் அறிவியல் இருகிறதா? உலகத்தில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கை விரிக்கக்கூடிய சில சமயங்கள் இருக்கிறது என்று சொன்னால் அதில் முதலாவதாக மரணம். இனி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கை விரித்து விடுவார்கள்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! யார் அல்லாஹ்வை நினைத்து, மார்க்கத்தை நினைத்து, மறுமையை பயந்து அதற்கான தயாரிப்பில் இருந்தார்களோ அவர்களை குறித்து ரப்பு சொல்லிக்காட்டுகிறான்;
 
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ
 
எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும், (அல்குர்ஆன் : 41:30)
 
نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ
 
‘‘நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம்; மறுமையிலும் (நாங்கள் உங்களுக்கு நண்பர்களே). சொர்க்கத்தில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்''(அல்குர்ஆன் 41 : 31)
 
نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ
 
‘‘பாவங்களை மன்னித்து மகா கருணை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்'' என்றும் (வானவர்கள்) கூறுவார்கள். (அல்குர்ஆன் : 41 : 32)
 
வசனத்தின் கருத்து : எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி அதன் மீது உறுதியாக நிலைத்து இருந்தார்களோ, -நாங்கள் அவனை தான் வணங்குவோம். வணக்கம் தான் எங்களுடைய வாழ்க்கை. அல்லாஹ்வை வணங்குவதற்கு தான் அவன் வாழ்க்கையை கொடுத்து இருக்கிறான் என்று. வணக்கத்தை முன்வைத்து, இபாதத்தை முன்வைத்து, அல்லாஹ் நமக்கு பட்டியலிட்ட வழிபாடுகளை முன்வைத்து, யார் வாழ்ந்தார்களோ அதிலே உறுதியாக இருந்தார்களோ மரண நேரத்தில் மலக்குகள் வந்து விடுவார்கள். அவர் பார்ப்பார் நாம் பார்க்க முடியாது. நம்மை விட்டு அவர்களுடைய பார்வை தடுக்கப்பட்டு விடும்.
 
அந்த மலக்குகள் சொல்வார்கள். நீங்கள் முன்னால் உள்ளதை பற்றி பயப்பட வேண்டாம். பின்னால் உள்ளதை பற்றி கவலைப்பட வேண்டாம். -முன்னால் உள்ளது என்றால் நீங்கள் அடுத்து கப்ரை சந்திக்க வேண்டுமே, மறுமையை சந்திக்க வேண்டுமே, பயப்படாதீர்கள்-.
 
இதைத்தான் ஸலஃப்கள் சொல்கிறார்கள். உலகத்திலேயே அல்லாஹ்வை பயந்து, மறுமையை பயந்து, கப்ரை பயந்து, வாழ்ந்து கொண்டால் அல்லாஹு தஆலா மறுமையிலே பயம் அற்ற நிலையை கொடுப்பான். யார் இந்த உலகத்திலேயே அல்லாஹ்வை, மறுமையை, ஆகிரத்தை, பயப்படாமல் வாழ்ந்தார்களோ அவர்களின் மரணத்திற்குப் பிறகு பயமே பயம்தான். நல்லவர்களுக்கு எத்தகைய பெரிய பயமும் அவர்களுக்கு திடுக்கத்தை கவலையை துக்கத்தை கொடுக்காது .
 
لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْأَكْبَرُ
 
மறுமையில் ஏற்படும் பெரும் திடுக்கம் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அல்குர்ஆன் 21 : 103)
 
மலக்குகள் சொல்வார்கள்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியை கொண்டு சந்தோஷம் அடையுங்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் உங்களுக்கு உண்டு. கிடைத்துவிடும். (அல்குர்ஆன் 41 : 30)
 
அல்லாஹ்வின் அடியார்களே! அவரிலிருந்தே சொர்க்க வாழ்க்கை ஆரம்பமாகிவிடும். ரொம்ப தூரமாக பார்க்க வேண்டாம். ஒரு மனிதர் மரணித்து விட்டால் அவருடைய கியாமத் ஏற்பட்டுவிடுகிறது. அவருடைய கப்ரிலே அவருக்கு ஒரு விசாரணை. அந்த விசாரணைக்கு ஏற்ப அவருக்கு சொர்க்கமோ நரகமோ அது அங்கே முடிவு செய்யப்படுகிறது. 
 
அந்த மலக்குகள் மேலும் சொல்வார்கள். உலகத்திலே நாங்கள் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம். மறுமையிலும் இருப்போம். மறுமை வாழ்க்கையில் உங்களுக்கு மனம் விரும்பியதெல்லாம் கிடைக்கும்.
 
இன்னும் நீங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும். மகா மான்னிப்பாளனாகிய கருணையாளனாகிய அல்லாஹ்வின் புறத்திலிருந்து விருந்தாக கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 41 : 31)
 
மரண நேரத்தை குறித்து ரப்புல் ஆலமீன் எச்சரிக்கை செய்கிறான். பாவிகள் உயிர் வாங்கப்படும் போது எத்தகைய திடுக்கத்தையும், எத்தகைய பயங்கரமான காட்சியையும் சந்திப்பார்கள்.
 
وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنْفُسَكُمُ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ
 
(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்).
 
வசனத்தின் கருத்து : நபியே! அந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். என்ன காட்சி? அநியாயக்காரர்களை மலக்குகள் உயிர் வாங்க வரும்போது, அந்த அநியாயக்காரர்கள் மவுத்தின் மயக்கத்தில் இருக்கும் போது, மவுத்தின் திடுக்கத்தில் இருக்கும் போது, அந்த மவுத் என்ற திடுக்கத்திலே ஆபத்திலே மூழ்கும் போது தங்களுடைய கைகளை ஏந்தி உங்களுடைய உயிரை வெளியேற்றுங்கள் என்று கூறுவார்கள். 
 
மலக்குல் மவுத்தை பார்க்கும்போது இந்த காஃபிர்களுடைய பாவிகளுடைய உயிரோ பயந்து நடுங்கி உடலை கவ்விப் பிடித்துக் கொள்ளும். மலக்கு கடுமையாக பிடித்து இழுப்பார். நல்லவர்களோ சந்தோஷத்தில் எங்களை விரைவாக அழைத்துச் செல்லுங்கள் என்று மலக்கோடு செல்வதற்கு தயாராகிவிடும். இலகுவாக எடுத்துச் செல்வார். அல்லாஹ்வின் அடியார்களே! மலக்குகள்  சொல்வார்கள்.
 
அல்லாஹ்வின் மீது பொய்யுத்துரைத்தீர்களே, அல்லாஹ்வின் அத்தாட்சிகளை, சட்டங்களை கேட்காமல் பெருமை அடித்தீர்களே, உங்களுக்கு இன்று கேவலமான தண்டனை, உங்களை இழிவுபடுத்தும் வேதனை உண்டு என அந்த மலக்கு கூறுவார்.
 
கண்ணியத்திற்குரிய நல்லடியார்களே! அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கின்ற இந்த மரணம் என்பது உண்மையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று. நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒன்று. யோசிக்க முடியாது. திட்டமிட முடியாது. ஒவ்வொரு நாளும் அதற்கான தயாரிப்பில் நினைவில் யார் இருந்தார்களோ அவர்கள்தான் பிழைத்தார்கள். யார் ஒவ்வொரு நாளும் காலை மாலை என்று ஒவ்வொரு நேரத்திலும் தனக்குத்தானே அந்த மரணத்தை நினைவூட்டிக் கொண்டு, இஸ்திஃபார் செய்து, தவ்பா செய்து, இபாதத்துகளை செய்து, ஹக்குகளை கொடுத்து, அமானிதங்களை பேணி, நேர்மையோடு வாழ முயற்சி செய்தார்களோ, அவர்கள் தான் தப்பிப்பார்கள். சிறிது அலட்சியம் செய்தாலும் சரி. 
 
ஒருவர் வணங்குகிறார். அதே நேரத்தில் வணக்கத்திற்கு பிறகு பாவம், பிறகு கொஞ்சம் வணக்கம், பிறகு பாவம், சந்தர்ப்பம் கிடைத்தால் மொத்தமாக பாவத்திலே மூழ்கி விடுவது. இது பயங்கரமான நிலை.
 
அறிஞர்களில் ஒருவர் கூறுகிறார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கையும் செய்துள்ளார்கள். அல்லாஹ்வுடைய தூதர் கூறிய கூற்றிற்கு இப்னு உமர் (ரலி) நமக்கு விளக்கம் கூறினார்கள்;
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ» وَكَانَ ابْنُ عُمَرَ، يَقُولُ: «إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ، وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ، وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ»
(صحيح البخاري 6416 -)
 
இந்த உலக வாழ்க்கையிலே நீங்கள் ஒரு பயணியை போல், ஒரு பரதேசியை போல் இருந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். 
 
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6416.
 
இந்த ஹதீஸிற்கு இப்னு  உமர் அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள். என்ன பொருள் தெரியுமா? நீங்கள் காலையை அடைந்தபோது மாலையை எதிர்பார்க்காதீர்கள். மாலை பொழுதில் இருக்கும் பொழுது காலைப் பொழுதை எதிர்பார்க்காதீர்கள். அந்த அளவு மரணத்துக்கு உண்டான நினைவிலேயே இருங்கள்.
 
ஒரு கவிஞர் கூறுகிறார்;
 
تَزَوَّدْ مـن التقـوى فإنك لا تـدري *** إذا جَنَّ ليلٌ هـل تعيشُ إلى الفجرِ
 
இந்த துன்யாவிலிருந்து மரணத்துக்கான தயாரிப்பை செய்துகொள். சகோதரனே! உனக்கு தெரியாது. இரவின் இருள் சூழ்ந்து விடும் போது காலை ஃபஜ்ரு வரை நீ இருப்பாயா என்று. 
 
ஆகவேதான் இஷாவுக்குப் பிறகு தூங்கும் போதே துஆக்களை ஓதி தவ்பா இஸ்திக்ஃபார் செய்து அதற்கான தயாரிப்போடு உறங்க வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதரின் துஆக்களை பாருங்கள். 
 
رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ 
 
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தூக்கத்தின்போது, தன்னுடைய கண்ணை மூடும் போது, அவர்கள் செய்த இறுதி வார்த்தையிலே ஒன்று, இறுதி துஆக்களிலே ஒன்று, என்னுடைய ரப்பே! உன்னுடைய அடியார்களை நீ மறுமையிலே ஒன்று சேர்க்கும் நாளில் உன்னுடைய தண்டனையிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக. 
 
அறிவிப்பாளர்: பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 3399.
 
وكم من صحيحٍ مات من غير علةٍ *** وكم من عليلٍ عاش حيناً من الدهرِ
 
எத்தனையோ ஆரோக்கியமானவர்கள் நோயற்றவர்களாக இறந்துவிட்டார்கள் இன்னும். நோயுற்ற எத்தனையோ பேர் பல காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே!  
 
ஆகவே நோயை வைத்து, ஆரோக்கியத்தை வைத்து, மரணத்தை முடிவு செய்யாதீர்கள். 
 
وكم من صغارٍ يُرْتَجَى طولُ عمرهم *** وقد أُدخلت أجسامُهم ظلمـةَ القبرِ
 
எத்தனையோ வாலிபர்களை சிறுவர்களை பார்க்கிறோம். நீண்டகாலம் வாழ்வார்கள் என்று பெற்றோர்களும் உறவினர்களும் ஆதரவு வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம்  கப்ரிலே நுழைக்கப்பட்டு அவர்களின் உடல்கள் மண்ணாகிவிட்டனவே! கப்ரின் இருளிலே அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு விட்டனவே!
 
وكم من عروسٍ زينوهـا لزوجهـا *** وقد قُبضت أرواحُهـم ليلةَ القدرِ
 
எத்தனையோ மணப்பெண்கள் அவர்களுடைய கணவன்மார்களுக்கு அலங்கரிக்கப்பட்டு அவர்களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் அந்தப் பெண்ணுடைய கஃபனோ தயார் செய்யப்பட்டு விட்டது. அது அவளுக்கு தெரியாது. 
 
அல்லாஹ்வின் அடியார்களே! இதுதான் மரணம். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்;
 
أكثروا ذكرَ هاذمِ اللَّذاتِ : الموتِ ؛ فإنَّه لَم يذْكُرْه أحدٌ في ضيقٍ مِن العَيشِ إلَّا وسَّعَه علَيهِ ، و لا ذَكرَه في سَعةٍ إلَّا ضيَّقَها عليهِ. الراوي: أنس بن مالك وأبو هريرة | المحدث: الألباني | المصدر:  صحيح الجامع الصفحة أو الرقم:  1211 خلاصة حكم المحدث: حسن
 
உங்களுடைய சிற்றின்பங்களை, உங்களது அற்ப ஆசைகளை விட்டு உங்களை துண்டிக்க வைக்கக்கூடிய மரணத்தை நினைவு கூறுங்கள். 
 
வாழ்க்கையில் நெருக்கடியாக இருக்கும் போது மரணத்தை நினைவு கூர்ந்தால் அந்த வாழ்க்கை மரணத்தின் நினைவை விசாலமாக்கி விடும். ஒருவன் வசதியாக இருக்கும் போது, விசாலமான வாழ்க்கையில் இருக்கும் போது, மரணத்தை நினைத்தால் அந்த மரணம் அவனது அந்த வாழ்க்கையை நெருக்கடி ஆக்கிவிடும். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ, எண்: 1211.
 
எவ்வளவு அழகான தத்துவத்தை சொன்னார்கள். ஒரு மனிதன் வறுமையிலே இருக்கிறான் என்றால் அவன் மரணத்தை நினைவு கூர்ந்தால் அந்த வறுமை அல்லது அந்த நோய் அவனுக்கு இலகுவாகி விடும். 
 
நான் இந்த கஷ்டத்திலே பொறுமையாக இருந்தால் மரணத்திற்குப் பிறகு அல்லாஹ் எனக்கு வசதியான வாழ்க்கையை கொடுப்பான் என்று. அவனிடம் இருக்கும் நம்பிக்கை அந்த சிரமத்தை அவனுக்கு லேசாக்கிவிடும். ஒருவன் மிகப்பெரிய ஆடம்பரமான வாழ்க்கையில் இருக்கிறான். அதனுடைய மோகத்திலே பெருமையிலே இருக்கிறான். அவனுக்கு மரணத்தின் நினைவு வந்து விட்டால் அவன் பார்க்கக்கூடிய அந்த ஆடம்பரமான வாழ்க்கையிலே வெறுப்பு வந்துவிடும்.
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! நம்முடைய ஸலஃப்கள் கூறுகிறார்கள். யார் மரணத்தை அதிகமாக நினைக்கிறார்களோ அல்லாஹு தஆலா அவருக்கு மூன்று விஷயங்களைக் கொண்டு கண்ணியப்படுத்துவான். 
 
1. ஒன்று அவர் தவ்பாவை மிக விரைவாக செய்து பாவங்களிலிருந்து விலகி இருப்பார். 
 
2. இரண்டாவது அவரது உள்ளத்தில் போதும் என்ற தன்மை இருக்கும், மனநிறைவு இருக்கும். 
 
3. மூன்றாவதாக வணக்க வழிபாட்டில் அவருக்கு ஆர்வம் இருக்கும். 
 
யார் மரணத்தை மறப்பாரோ மூன்று விஷயங்களை கொண்டு அவர் தண்டிக்கப்படுவார். 
 
1. ஒன்று, நாளை மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம். நாளை தவ்பா கேட்டுக் கொள்ளலாம். பாவமன்னிப்பு தேடுவதை தள்ளி போட்டு கொண்டே இருப்பார்கள். 
 
2. போதுமான செல்வத்தைக் கொண்டு வாழ்க்கையை கொண்டு அவருக்கு மன திருப்தி ஏற்படாது. 
 
3. வணக்க வழிபாட்டிலே சோம்பேறித்தனமாக இருப்பார். 
 
அல்லாஹ் சொல்கிறான், வணக்க வழிபாட்டுக்கு விரைந்து வாருங்கள்; ஓடி வாருங்கள் என்று.
 
فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ
 
ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அல்குர்ஆன் 51 : 50)
 
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ 
 
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறையச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3 : 133)
 
ஆனால் நம்மிடத்தில் எவ்வளவு சோம்பேறித்தனம் இருக்கிறது. அல்லாஹ்வுடைய நினைவிலே, குர்ஆன் ஓதுவதிலே, இன்ன இன்ன இபாதத்துகளிலே. காரணம் என்ன? மவுத்தை நினைக்காமல் இருப்பது தான்.
 
அல்லாஹ்வின் நல்லடியார்களே! நேரத்தை நாம் நினைக்க வேண்டும். தன்னுடைய முடிவை குறித்த பயம் நமக்கு வேண்டும். 
 
இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸை பாருங்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
 
فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ
 
யாரை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லையோ, அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் பார்ப்பதற்கு சொர்க்கவாசிகளின் அமல்களை செய்து கொண்டே இருப்பார். அவருக்கும் மரணத்திற்கும் இடையே ஒரு முழம் மட்டுமே இருக்கும். அல்லாஹ்வுடைய விதி முந்தி விடும். நரகவாசிகளின் அமல்களை செய்து நரகத்திலே சென்றுவிடுவார். அதுபோன்று உங்களில் ஒருவர் பார்ப்பதற்கு நரகவாசிகளின் அமல்களை செய்து கொண்டிருப்பார். அவருக்கும் மரணத்திற்கும் ஒரு முழத்தை தவிர வேறு இருக்காது. அல்லாஹ்வுடைய விதி முந்திவிடும். சொர்க்கவாசிகளின் அமல்களை செய்து அவர் சொர்க்கத்தில் சென்றுவிடுவார். (1)
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 3208.
 
இது மிகப்பெரிய எச்சரிக்கை. என்னுடைய முடிவை எனக்கு அழகாக்கிக் கொடு யா அல்லாஹ்! என்னுடைய மரண நேரத்தில் எனக்கு ஈமானை இஸ்லாமை கொடு! அந்த பிரார்த்தனை இருப்பதோடு வாழ்நாளெல்லாம் அதை மொழிந்து கொண்டே இருக்க வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! அப்படி வாழும் போது தான் இந்த உலக வாழ்க்கையை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒவ்வொரு நேரத்தையும் வீணாக்காமல் இபாதத்திலே மறுமைக்கான தயாரிப்பிலே சொர்க்கத்திற்கான அந்த நிலையிலே நாம் கழிக்க முடியும். 
 
أنَّ رسولَ اللهِ مرَّ بقبرٍ فقال مَن صاحِبُ هذا القبرِ فقالوا فلانٌ فقال ركعتانِ أحَبُّ إلى هذا مِن بقيَّةِ دُنياكم. الراوي: أبو هريرة | المحدث: الطبراني | المصدر:  المعجم الأوسط الصفحة أو الرقم:  1/282 خلاصة حكم المحدث: لم يرو هذا الحديث عن أبي مالك إلا حفص بن غياث تفرد به حفص بن عبد الله
 
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸில் பாருங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு கப்ரை கடந்து சென்றபோது இந்தக் கப்ரிலே யார் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று பாருங்கள். மக்கள் சொன்னார்கள்; இன்னார் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
 
இப்போது இந்த மனிதருக்கு உலக செல்வங்களை எல்லாம் கொட்டிக் கொடுக்கிறோம். அது வேண்டுமா? அல்லது இரண்டு ரக்ஆத் தொழுகை வேண்டுமா? என்று கேட்டால் இரண்டு ரக்அத் தொழுகை இவருக்கு விருப்பம் ஆனது. உங்களின் உலகச் செல்வங்கள் அத்தனையும் விட. 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானி, எண்: 282/1.
 
இப்போது எவ்வளவு நேரம் இருக்கிறது? எவ்வளவு நேரம் எவ்வளவு வாய்ப்பிருக்கிறது? தவற விடுகிறோமே! 
 
இன்னொரு அறிவிப்பில் வருகிறது. 
 
رَكْعتانِ خَفيفتانِ بِما تَحقِرُونَ وتَنفِلُونَ يَزيدُهما هذا في عملِهِ أحَبُّ إليه من بقيَّةِ دُنياكُمْ. الراوي: أبو هريرة | المحدث: الألباني | المصدر:  صحيح الجامع الصفحة أو الرقم:  3518 خلاصة حكم المحدث: صحيح التخريج: 
 
லேசான இரண்டு ரக்அத்துகள், சுருக்கமான இரண்டு ரக்அத்துகள், நீங்கள் சாதாரணமாக கருதுகிறீர்களே! நீங்கள் தொழக்கூடிய இரண்டு ரக்அத்துகள் இவருடைய அமலை அதிகப்படுத்தி விடுவது. இவருடைய நன்மைகளை அதிகப்படுத்தி விடுவது. இவருக்கு இப்போது மிக விருப்பமானது உங்களுடைய துன்யாவின் செல்வங்கள் எல்லாம் கிடைப்பதைக் காட்டிலும்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ, எண்: 3518.
 
நினைத்துப் பாருங்கள் சகோதரர்களே! நம்மில் எத்தனை பேர் ஃபர்ளுகளை பாழாக்கி கொண்டிருக்கிறார்கள். கடமையான தொழுகைகளை, கடமையான நோன்புகளை, ஜகாத்தை, இன்னும் எத்தனை பேர் ஹஜ் கடமையாகியும் ஹஜ் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
 
அல்லாஹ் கூறுகின்றான். ஒரு வசனத்தை கூறி நிறைவு செய்கிறோம். ரப்புல் ஆலமீன் நமக்கு நினைவூட்டுகிறான்,
 
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ
 
ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 39 : 54)
 
وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ
 
(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான (இ)தைப் பின்பற்றுங்கள். (அல்குர்ஆன் 39 : 55)
 
أَنْ تَقُولَ نَفْسٌ يَاحَسْرَتَا عَلَى مَا فَرَّطْتُ فِي جَنْبِ اللَّهِ وَإِنْ كُنْتُ لَمِنَ السَّاخِرِينَ
 
(உங்களில்) எவரும், ‘‘அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவற்றைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என் கேடே! நான் (இவற்றைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்; (அல்குர்ஆன் 39 : 56)
 
வசனத்தின் கருத்து : அடியார்களே! உங்களின் ரப்பின் பக்கம் நீங்கள் திரும்பி விடுங்கள். அவனுக்கு முன்னால் பணிந்து விடுங்கள். வணக்க வழிபாடுகளில் வந்துவிடுங்கள். மரணத்தின் வேதனை உங்களுக்கு வருவதற்கு முன்னால். அப்போது உங்களுக்கு உதவுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். உங்கள் ரப்பிடம் இறக்கப்பட்ட மிக அழகான இந்த மார்க்கத்தை பின்பற்றுங்கள். திடீரென்று உங்களுக்கு வேதனை வரும் முன்னால் அந்த வேதனை எப்போது எந்த நிலையில் உங்களுக்கு வரும் என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள். அந்த நேரத்திலே ஒரு ஆன்மா கதறும். அல்லாஹ்வுடைய இபாதத்திலே வணக்க வழிபாட்டிலே நான் இவ்வளவு பெரிய அநியாயம் செய்து விட்டேனே! குறை செய்துவிட்டேனே! எனக்கு ஏற்பட்ட கைசேதமே! துக்கமே! என்று அந்த நஃப்ஃஸ் கதறும். 
 
மார்க்கத்தை ஏளனமாக சாதாரணமாக பரிகாசம் செய்யக் கூடியவர்களிலே நான் இருந்து விட்டேனே! என்று கதறும். ரப்பு சொல்கிறான். அந்த நாள் வருவதற்கு முன்னால் நீங்கள் ரப்பிடம் திரும்பி விடுங்கள். அவனுக்கு முன்னால் பணிந்து விடுங்கள். கொடுத்த அழகிய மார்க்கத்தை பின்பற்றுங்கள் என்று.
 
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவனை நினைப்பதற்கு அவனுடைய மார்க்கத்தின் பக்கம் திரும்புவதற்கு நமக்கு வாய்ப்புகளை நினைவூட்டல்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறான். யார் விழித்தார்களோ, யார் சிந்தித்தார்களோ, உணர்வு பெற்றார்களோ, படிப்பினை பெற்றார்களோ, அவர்கள் நற்பாக்கியம் பெறுவார்கள். யார் மறந்தார்களோ, அலட்சியம் செய்தார்களோ, புறக்கணித்தார்களோ, கண்டிப்பாக அவர்கள் நஷ்டம் அடைந்தே தீருவார்கள். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நஷ்டத்திலிருந்து, இழிவிலிருந்து, இம்மை மறுமையின் கேவலத்தில் இருந்து, என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக. அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டும், நபியின் உபதேசத்தைக் கொண்டும், படிப்பினை பெற்று அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு தவ்பா செய்து மறுமைக்கான தயாரிப்புகளை செய்து கொள்ளக்கூடிய நல்லோரில் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا الحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ، قَالَ: " إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ: اكْتُبْ عَمَلَهُ، وَرِزْقَهُ، وَأَجَلَهُ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ " (صحيح البخاري 3208 -)
 

Darul Huda

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/